டெல்லி மருத்துவமனைகளில் 2-வது நாளாக கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு - கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
Apr 21 2021 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மருத்துவமனைகளில் 2-வது நாளாக கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தங்கள் மாநிலத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் திரு.மனிஷ்சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று இரண்டு மருத்துவமனைகளில் முற்றிலும் ஆக்சிஜன் இல்லாத அபாய நிலை ஏற்பட்டது. 2-வது நாளாக இன்றும் பல மருத்துவமனைகளில் அதே நிலைமையே நீடிக்கிறது. வழக்கமாக வர வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்கள்கூட வரவில்லை என்றும், இது மிகவும் மோசமான நிலை என்றும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வருவதிலும் சிரமம் ஏற்படுவதாகவும், ஹரியானாவில் சில அரசு அதிகாரிகள் சிலிண்டர்கள் ஏற்றிவந்த டேங்கர்களை தடுத்து நிறுத்தி தாமதப்படுத்தியதாகவும் துணை முதல்வர் திரு.மனிஷ் சிசோடியா தெரிவித்தார். டெல்லியில் மட்டும் 18 ஆயிரம் நோயாளிகள் இருப்பதாகவும், அதனால் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார். டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதால், கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.