கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் : மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி
Apr 21 2021 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த திருமதி. பிரியங்கா காந்தி, கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 11 லட்சம் ரெம்டெசிவிர் ஊசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று நம் நாட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த 3 மாதங்களில் 6 கோடி கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், அந்த காலகட்டத்தில் 3-லிருந்து 4 கோடி இந்திய மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கொரோனா சிகிச்சை மருந்து மற்றும் தடுப்பூசிகளை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என்று பிரதமருக்கு திருமதி. பிரியங்கா கேள்வி எழுப்பினார். கொரோனா நெருக்கடி நேரத்திலும் தேர்தல் பிரச்சார மேடைகளில் கவனம் செலுத்தும் பிரதமர் திரு. மோடி, அதனை தவிர்த்து, மக்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.