பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு
Mar 9 2021 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. இரண்டாம் கட்ட அமர்வின் முதல் நாளான நேற்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பிரச்னையை எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் எழுப்பின. அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதனால், இரு அவைகளும் இரு முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.