தங்கக்கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளிக்க ஸ்வப்னா சுரேஷுக்கு நிர்பந்தம் - அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக வெளியான தகவலால் சர்ச்சை
Mar 9 2021 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷிடம், இவ்வழக்கில் முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்க வலியுறுத்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சுங்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக, ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், திரு. பினராயி விஜயன் பெயரை கூறும்படி ஸ்வப்னா சுரேஷ் கட்டாயப்படுத்தப்பட்டார் என, ஸ்வப்னாவின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்வப்னா சுரேஷ் சித்ரவதை செய்யப்பட்டார் என்றும், தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டார் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்வப்னா சுரேஷ் வீடியோ மூலம் அளித்த வாக்குமூலத்தில் திரு. பினராயி விஜயன் பெயரை குறிப்பிட்டார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரியின் இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.