டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு - பஞ்சாப், நாசிக் போன்ற பகுதிகளிலும் பிரம்மாண்ட பேரணி
Jan 25 2021 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப், நாசிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந் தேதியில் இருந்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்ததால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். விவசாயிகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பல மாநிலங்களில் பேரணி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதற்காக நாசிக்கிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
இதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர். டிராக்டர்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என பலவகை வாகனங்களிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் பெண்களும் டிராக்டர் ஓட்டி அசத்தினர்.