டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் 4 முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய சதித்திட்டம் - விவசாயிகளின் புகாரில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என ஹரியானா போலீசார் தகவல்
Jan 24 2021 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில், 4 முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ள புகாருக்கு எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 61-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ள விவசாயிகளில், 4 முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யவும், வரும் 26-ம் தேதியன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கவும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் போராட்டம் நடைபெறும் இடத்தில் ஊடுருவிய ஒரு மர்ம நபரை, விவசாயிகள் பிடித்து, ஹரியானா போலீசாரிடம் ஒப்படைத்தனர். வரும் 26-ம் தேதி, டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும்போது, போலீஸ்காரர்களைப் போல சீருடை அணிந்த சிலர் ஊடுருவி, தடியடி நடத்தி, குழப்பம் விளைவிக்க இருப்பதாக, அந்த நபர் தெரிவித்ததாகவும், விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும், எனினும் சம்மந்தப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஹரியானா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.