லாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி
Jan 23 2021 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லாலு பிரசாத்துக்கு உரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்திக்க உள்ளதாக லாலு பிரசாத் மகன் திரு. தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான திரு. லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இவருக்கு 25 சதவீதம் மட்டுமே சிறுநீரகங்கள் செயல்படுவதாகவும், உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு. லாலு பிரசாத் யாதவை, அவரது மனைவி திருமதி. ரப்ரி தேவி, அவரது மகள் மற்றும் மகன்கள் நேரில் சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. லாலுவின் மகனும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. தேஜஸ்வி யாதவ், தந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாக, மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை இன்று சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.