விவசாயிகள் பெயரில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் - மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்
Nov 28 2020 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியை நோக்கி படையெடுத்த விவசாயிகளால், டெல்லி - ஹரியானா எல்லையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள புராரி என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்காக விவசாய சங்கங்களை அழைத்துள்ளதாகவும், இதில், விவசாயிகள் பங்கேற்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறிய அவர், விவசாயிகள் பெயரில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.