புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் - தலைநகரில் குவியும் லட்சக்கணக்கான விவசாயிகள்
Nov 28 2020 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தலைநகர் நோக்கி படையெடுத்துள்ளனர்.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நேற்று முன்தினம் தலைநகரை நோக்கி டெல்லி சலோ என்ற போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல், ஹரியானா மாநிலத்திலேயே தடுத்து நிறுத்த அம்மாநில பா.ஜ.க. அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. போலீசார், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதுடன், தடியடியும் நடத்தினர். இருந்தபோதிலும், அனைத்து எதிர்ப்பையும் கடந்து, விவசாயிகள், தலைநகருக்குள் நுழைந்தனர்.
இதனிடையே தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இளைஞர்கள், பெண்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் டெல்லி புராரி மைதானத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களுடன், டிராக்டர், பேருந்து, இருசக்கர வாகனங்களில் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு, பேரணியாக வந்துகொண்டிருப்பதாக பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது.