கொரோனா தடுப்பூசி உற்பத்தி பணிகள் தீவிரம் - குஜராத் ஜைடஸ் பயோடெக் பூங்காவில் பிரதமர் மோதி ஆய்வு
Nov 28 2020 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோதி நேரில் ஆய்வு செய்தார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள், குஜராத், மஹாராஷ்ட்ரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. குஜராத்தின் அஹமதாபாதில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவில், 'ஜைகோவ்-டி' என்னும் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை, கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மஹாராஷ்ட்ர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதன் பரிசோதனை 3-ம் கட்டத்தில் உள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவேக்சின்' என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதன் பரிசோதனையும், 3-ம் கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதி, இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். முதல்கட்டமாக, குஜராத்தின் அஹமதாபாத் நகரில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து நிபுணர்களிடம் அவர் கேட்டறிந்தார்.