நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவச கொரோனா தடுப்பூசி - நடவடிக்கையைத் தொடங்கியது மத்திய அரசு
Oct 24 2020 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் முன்னுரிமையின் அடிப்படையில், 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அரசு தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து, முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 30 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரானவுடன், நேரடியாக கொள்முதல் செய்வதற்கான பாதைகளை மாநில அரசுகள் வகுக்கக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பகட்டத்தில், 4 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கும், மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், ஆயுதப்படையினர் இரண்டு கோடி பேருக்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டோர் 26 கோடி பேருக்கும், நாள்பட்ட நோய்களைக் கொண்டுள்ள 50 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒரு கோடி பேரை தேர்வு செய்து, தடுப்பூசி வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி போடுகிற பணியாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.