தீபாவளி, துர்கா பூஜை பண்டிகையையொட்டி தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
Oct 21 2020 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி, துர்கா பூஜை பண்டிகையையொட்டி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரயில்வே கூறியுள்ளது.
தீபாவளி, துர்கா பூஜையையொட்டி, தென்மேற்கு ரயில்வே சார்பில் 42 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக மேலும் 10 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 24-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை தினமும் இயக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.55 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
மறுமார்க்கமாக மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 23-ந் தேதியில் இருந்து நவம்பர் 30-ந் தேதி வரை நாள்தோறும் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து இரவு 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தடையும்.
இதேபோல் கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 25-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை நாள்தோறும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.25 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
மறுமார்க்கமாக பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்பட உள்ளது. பெங்களூருவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.