சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய யு.பி.எஸ்.சி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Sep 28 2020 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் UPSC பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.ஏ.எம்.கன்வில்கர் மற்றும் திரு.சஞ்சீவ் கண்ணா அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே செப்டம்பர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு, அக்டோபர் 4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தேர்வுகளை மீண்டும் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் UPSC தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கு தொடர்பாக பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய யுபிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.