மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம், நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கொந்தளிக்கும் விவசாயிகள் - கர்நாடக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
Sep 28 2020 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசுப் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால், தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. பெங்களூருவில் மெட்ரோ ரயில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பால், மருந்துக்கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயங்கி வருகின்றன. ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. எனினும், விமான நிலையத்திற்கு இயக்கப்படும் வாடகைக்கார்களின் சேவையில் பாதிப்பில்லை. முழு அடைப்பு காரணமாக இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தவைக்கப்பட்டு, வரும் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.