மகாராஷ்டிராவில் வலுக்கும் கனமழையால் மும்பை, தானே, வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரம்
Aug 4 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடை மழை பெய்வதால் மும்பை, தானே, வடக்கு கொங்கன் போன்ற பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் மழைப்பொழிவு கடுமையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்றும் அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. அங்குள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரத்தில் மும்பை நகரில் 230 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பல இடங்களில் கனமழை பெய்வதால் மும்பை, தானே, வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளிலிருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டு வருகின்றனர்.