இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - 519 பேர் பலி
Jul 11 2020 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 27 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிரடி உயர்வை கண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 27 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு, 8 லட்சத்து 20 ஆயிரத்து 916-ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 519 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 123-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.