டெல்லியில் குடியரசு தலைவரை திடீரென சந்தித்தார் பிரதமர் மோதி - சீனாவுடனான எல்லை மோதல் குறித்து விவாதித்திருக்கலாம் என தகவல்
Jul 5 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தை இன்று திடீரென சந்தித்தார். கொரோனா நெருக்கடி மற்றும் சீனாவுடனான எல்லை மோதலுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், முப்படை தளபதி திரு. பிபின் ராவத், ராணுவ தளபதி திரு. நரவனே ஆகியோருடன், பிரதமர் திரு. மோதி நேற்று முன்தினம் திடீரென சீனாவை ஒட்டிய எல்லைப்பகுதியான லடாக் சென்றார். கடல்மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே மற்றும் நிமு பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ-திபெத் வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகமூட்டிய பிரதமர், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கேட்டறிந்தார். பிரதமரின் இந்த பயணத்தால், இந்தியா-சீனா இடையே மேலும் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில், குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தை, பிரதமர் திரு. மோதி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, லடாக் எல்லை பிரச்னை, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு பிரதமர் திரு. மோதி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.