கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் - லடாக்கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு
Jul 3 2020 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்வதாகவும், அமைதியை அடைய வீரமே அடிப்படை என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி கூறியுள்ளார்.
லடாக்கில் பாதுகாப்புப்படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் திரு. மோதி, சீனாவுக்கு எதிரான மோதலில், வீர மரணமடைந்த நமது வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என தெரிவித்தார். வீரர்களின் உயிர்த்தியாகம் நாட்டின் பலத்தை உலகறியச் செய்துள்ளதாகவும், மலை சிகரங்களின் உயரங்களைவிட வீரர்களின் தியாகம் உயரமானது என்றும் கூறினார். இந்திய வீரர்கள் பயம் அறியாதவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்திய பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு தலை வணங்குவதாக தெரிவித்தார். நமது வீரர்களின் தைரியத்தைக் கண்டு எதிரிகள் அச்சமடைந்துள்ளதாகவும், எந்த எதிரியையும் எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு என்றும் கூறினார்.
கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்றும், ஆக்கிரமிப்பு சக்திகள் வலுவிழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆக்கிரமிப்பின் காலம் முடிந்து விட்டதாகவும், இது வளர்ச்சியின் காலம் என்றும் கூறினார். அமைதியை அடைய வீரமே அடிப்படை என்று தெரிவித்த பிரதமர், போர் படைக்கு தேவையான மாண்புகளை திருக்குறள் மூலம் மேற்கோள்காட்டினார். வீரம், மானம், முன் வீரர்கள் சென்ற வழியில் செல்லுதல், தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய 4 பண்புகளும் படைக்கு சிறந்தது என விளக்கினார். வீரர்கள் இடையே பிரதமர் திரு. மோதி ஆற்றிய இந்த உரை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.