லடாக்கில் பிரதமர் மோடி நடத்திய திடீர் ஆய்வு - இந்தியா-சீனா எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு
Jul 3 2020 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவி வருகையில், பிரதமர் திரு. மோதி, லடாக் எல்லையில் இன்று திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி, இந்திய - சீன ராணுவம் இடையே நடந்த மோதலில், இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்தியா, பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. சீன ராணுவமும் அங்கு ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், முப்படை தளபதி திரு. பிபின் ராவத், ராணுவ தளபதி திரு. நரவனே ஆகியோருடன், பிரதமர் திரு. மோதி இன்று காலை திடீரென லடாக் சென்றார். கடல்மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே மற்றும் நிமு பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ-திபெத் வீரர்களுடன் உரையாடி உற்சாகமூட்டிய பிரதமர், பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், இன்று லடாக் செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டு, பிரதமர் திரு. மோதி திடீரென லடாக் சென்றது, இந்தியா-சீனா இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.