கொரோனா தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு
Jul 3 2020 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக, உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருக்கின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இதையடுத்து, கோவேக்சின் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியின், இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனையை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. வரும் 7-ம் தேதி முதல் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு சோதிக்கப்படவுள்ளதாகவும், சோதனை வெற்றி அடைந்தால், வரும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கொரோனா தடுப்பு மருந்து சோதனையை துரிதப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே, அஹமதாபாத்தை சேர்ந்த ஜைடல் காடிலா என்ற நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக, மனிதர்களிடம் சோதித்துப்பார்க்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.