நாடு முழுவதும் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 608 பேர் பலி - குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 754 ஆக அதிகரிப்பு
Jun 2 2020 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 7 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.
அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவில் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், வரும் 30-ம் தேதி வரை ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 2 ஆயிரத்து 358 பேரும், தமிழகத்தில், ஆயிரத்து 162 பேரும் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே, கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில், 70 ஆயிரத்து 13 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 362 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக, டெல்லியில், 20 ஆயிரத்து 834 பேரும், குஜராத் மாநிலத்தில் 17 ஆயிரத்து 217 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில், 9 ஆயிரத்து 100 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும், 95 ஆயிரத்து 754 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 96 ஆயிரத்து 997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 608 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.