அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோதி சீனா விவகாரம் குறித்து பேசவில்லை - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
May 29 2020 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோதி பேசவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய - சீன எல்லைப் பகுதிகளில், இரண்டு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாகவும், அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இதை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோதி இடையே அண்மையில் எந்தவித கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும், கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி ஹைட்ராக்சி குளோகுயின் மாத்திரை தொடர்பாக, கடைசியாக இருவரும் பேசினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்னை, சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.