கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இடையே, மத்தியபிரதேசத்தில், படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் - பயிர்களை சேதப்படுத்தும் அபாயம்
May 25 2020 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியபிரதேசத்தில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இடையே, பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டுதான் மீண்டும் தொடங்கியது. கடந்த 2018-ம் ஆண்டு, ஓமனில்தான் முதன்முதலாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தொடங்கியது. பின்னர் சோமாலியா, எத்தியோப்பியா, டான்சானியா வழியாக பாகிஸ்தான் வரை இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் சென்றுவிட்டன. அண்மையில் இந்தியாவுக்குள்ளும் வெட்டுகிளிகளின் தாக்குதல் தொடங்கியது. ராஜஸ்தானின் பல பகுதிகளில் பயிர்களையும் மரங்களையும் இரையாக்கிய வெட்டுக்கிளிகள், விவசாயிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில், செஹூர், சதர்பூர், போபால் உள்ளிட்ட பகுதிகளையும் தாக்கத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் சத்தம் எழுப்பியும், ரசாயன மருந்துகளை தெளித்தும் வெட்டுக்கிளிகளை விரட்ட முயற்சித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில், வெட்டுகிளிகள் படையெடுப்பு விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பானது, மழைக்காலம் வரை தொடரலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சேதமடையக்கூடும் என்றும் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.