நீண்ட இடைவேளைக்குப் பிறகு உள்ளூர் விமான சேவை தொடங்கியது - சென்னையிலிருந்து டெல்லிக்கு முதல் விமானம் சென்றது
May 25 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரண்டு மாதங்களுக்கு பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 111 பயணிகளுடன் இன்று காலை 6.45 மணிக்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
கொரோனா தடை உத்தரவுக்கான விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இன்றுமுதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயங்க உள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், 15 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னையிலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏஷியா, ஏர் இந்தியா விமானங்கள் முதல் நாள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்டிர அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கொல்கத்தாவுக்கும், மும்பைக்கும் விமானங்கள் இயக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அதில் வந்திறங்கிய 20 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினியை பயன்படுத்தவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்று காலை முதல் 8.15 அளவில் விமானம் வந்தடைந்தது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிஜுபட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு விமான சேவை தொடங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலிருந்து உள்ளூர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் முகக்கவசம் அணிந்து விமான நிலையங்களுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலிருந்து விமான போக்குவரத்து தொடங்கியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.