ஊரடங்கை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு
Apr 9 2020 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் திரு.அஜய் பல்லா எழுதிய கடிதத்தில், ஊரடங்கு காலத்தில், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்திக்கும், எடுத்துச் செல்வதற்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஆனால், ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது, கொள்ளை லாபம் ஈட்டுவது, யூக வாணிபத்தில் ஈடுபடுவது போன்ற செயல் களில் ஈடுபடுவதற்கும், அதனால் விலைவாசி உயர்வதற்கும் உள்ள வாய்ப்பையும் மறுக்க முடியாது என்றும் திரு. அஜய் பல்லா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஆகவே, ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் போதிய அளவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசின் முன்அனுமதி பெறுவதில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை மாநிலங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் விலக்கு அளித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1980-ம் ஆண்டின் கருப்புச்சந்தை தடுப்பு சட்டத்தின் படியும், குற்றவாளிகளை காவலில் வைப்பது பற்றி மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்றும் மத்திய உள்துறை செயலாளர் திரு. அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.