மத்திய அரசு விளம்பரங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என்ற சோனியா காந்தி கருத்துக்கு ரேடியோ நிறுவன கூட்டமைப்பு எதிர்ப்பு
Apr 8 2020 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு விளம்பரங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி அளித்துள்ள ஆலோசனைக்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் சவால்களை எதிர்கொள்ள ஆலோசனைகளை தெரிவித்து காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் 5 விஷயங்களை குறிப்பிட்டு அரசு சிக்கனமாக செயல்பட அறிவுறுத்தி இருந்தார். அந்த கடிதத்தில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் விளம்பரங்களை தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், மக்களின் பொது சுகாதாரம் தொடர்பான கோவிட் 19 குறித்த விளம்பரங்களுக்கு விலக்கு அளிக்கலாம். உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதற்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாகவே ரேடியோ நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் மேலாக விளம்பர வருமானம் குறைந்துள்ளது. இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தினால் ரேடியோ நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.