டெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்
Feb 28 2020 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. கலவரத்தை தூண்டியவர்கள் என சந்தேகிக்கப்படும் 514 பேரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 36 மணி நேரத்தில், அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 7 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை ஆணையராக, ஐ.பி.எஸ். அதிகாரி S.N.Shrivastava நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு பதிலாக, வரும் ஒன்றாம் தேதி முதல், அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளை துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால் பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில், டெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.