புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்
Jan 28 2020 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி அவ்வை திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் திரு.நாராயணசாமி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய திரு.நாராயணசாமி, மத்திய பா.ஜ.க அரசை வீட்டுக்கு அனுப்ப, 2-வது சுதந்திரப் போராட்டத்திற்கு மதச்சார்பற்ற அணிகள் தயாராக வேண்டுமென வலியுறுத்தினார்.
இதனிடையே, புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வரும் 12-ம் தேதி நடைபெற இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் திரு. வின்சன்ட் ராயர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.