முசாபர்பூர் காப்பக வழக்கில் காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
Jan 20 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீஹார் மாநிலம், முசாபர்பூர் காப்பக வழக்கில், காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பீஹார் மாநிலம், முசாபர்பூரில், அரசு நிதியுதவியுடன், சிறுமிகள் காப்பகம் இயங்கி வந்தது. இந்த காப்பகத்தை, அம்மாநில முன்னாள் சமூகநலத் துறை அமைச்சர் திருமதி. மஞ்சு வர்மாவின் கணவர், திரு. பிரஜேஷ் தாக்குர் என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில், இந்த காப்பகத்தில் இருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பான புகாரில், திரு. பிரஜேஷ் தாக்குர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., காப்பகத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் உயிருடன் இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், காப்பக உரிமையாளர் பிரஜேஷ் குமார், எட்டு பெண்கள் உள்ளிட்ட 19 பேரும் குற்றவாளிகள் என்றும், ஒருவர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 28-ம் தேதி தண்டனை குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்றும், டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.