நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமாரின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி
Jan 20 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா வழக்கில், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குற்றவாளிகளில் வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு, முகேஷ் சிங் சார்பில் அனுப்பப்பட்ட கருணை மனுவும் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, குற்றவாளிகள் 4 பேரையும், வரும் வரும் ஒன்றாம் தேதி தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான, பவன் குமார் குப்தா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நடந்தபோது, தான் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் மற்றும் போபண்ணா ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில், விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இது தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், புதிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.