நித்யானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - குஜராத் போலீசார் நடவடிக்கை
Jan 20 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக அஹமதாபாத் உயர்நீதிமன்றத்தில், குஜராத் போலீசார் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீதான குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற புகார்களின் அடிப்படையில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அஹமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம கிளை ஒன்றில், போலீசார் நடத்திய சோதனையில் 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகளான 2 பெண் சீடர்கள் உள்பட மேலும் சிலரை போலீசார் கைது செய்த நிலையில், இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால் நித்யானந்தா பற்றி உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா அழைத்துவர கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக அஹமதாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களை கடத்துதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது குஜராத் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.