டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை, வரும் ஃபிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்ற, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
டெல்லியில், மாணவி நிர்பயாவை, 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு, ஓடும் பேருந்தில் 6 பேர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், சாலையில் தூக்கிவீசி விட்டு தப்பியோடிவிட்டனர். முதலில் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையிலும், பின்னர், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட மாணவி நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை, டெல்லி திஹார் சிறையில், வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என ஏற்கனவே டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில், வினய் ஷர்மா, முகேஷ்குமார் ஆகிய இருவரும், மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த, குறைதீர் மனுக்களை, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அவர்கள் இரண்டுபேர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும், டெல்லி துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜாலுக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குற்றவாளி முகேஷ்குமார், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி முகேஷ்குமாரின் கருணை மனுவை நிராகரிக்குமாறு பரிந்துரைத்திருந்தது. இதனை ஏற்று, முகேஷ் குமாரின் கருணை மனுவை, குடிரயசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், இன்று நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தூக்கிலிடுவதற்கான ஆணையை வழங்கக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 4 பேரையும், வரும் ஃபிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.