மத்திய பாரதிய ஜனதா அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர, காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பாரதிய ஜனதா அரசு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய, குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்றும், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைப்பதாகவும் குற்றம் சாட்டி, அரசியல் கட்சியினர், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவ-மாணவியர், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தியே தீரும் என பிரதமர் திரு. நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை வலியுறுத்தி, கேரள மாநில சட்டமன்றத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில், டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் சட்டமன்றங்களில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சண்டிகரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, பஞ்சாப் முதலமைச்சர் திரு. Amarinder Singh-இடம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த திரு. அமரிந்தர்சிங், ''பொறுத்திருந்து பாருங்கள்'' என்று தெரிவித்தார். பஞ்சாப் சட்டமன்றக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பதால், இன்று, அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக, பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க கோரி கேரள அரசு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே குடியுரிமை சட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது என்றும், முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. S. மணிக்குமார், நீதிபதி திரு. Shaji P. Chaly ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.