ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் போர் பதற்றத்தை தவிர்க்க இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு - இருநாடுகளுக்கிடையே நிலவும் பிரச்னைகளை தொடர் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவும் தீர்மானம்
Aug 28 2014 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடிவு செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ நிலைகள் மீது 95 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் தாக்கினர். இந்த சம்பவங்களில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் உட்பட 17 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெஃப்டினென்ட் ஜெனரல் P.R.குமார், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடருமானால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தின் லெஃப்டினென்ட் ஜெனரல் P.R.குமாரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் அமிர் ரியாஸ், எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்த கோரிக்கை இந்திய தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் நடைபெற்றது. அப்போது, எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்தியத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.