முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எதிர்த்து, மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கில் ஒருவார காலத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 19-ம் தேதி முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஏற்கனவே தாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் பட்டியலிட்டார். இந்த பிரச்னையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இரட்டை வேடத்தையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்பலப்படுத்தினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருடன் ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பலத்த கரவொலிக்கு இடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை அடுத்து, அன்றைய தினமே தலைமைச் செயலகத்தில் பேரறிவாளனின் தாயார் திருமதி. அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், வரும் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சதாசிவம் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த திரு.சதாசிவம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாகவும், ஒரு வார காலத்திற்குள்- அதாவது, வரும் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.