ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான வழக்கு - சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட 172 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்துவிட்டு, மறு ஏலம் விட தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Sep 2 2014 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கில், தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், 172 சுரங்க ஒதுக்கீடுகளை மறு ஏலம்விட தயாராக இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரி அமைச்சகத்திற்கு பொறுப்பு வகித்தபோது, நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு, கடந்த 25-ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கங்களை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஆர்.எம். லோதா மற்றும் நீதிபதிகள் திரு. மதன் B. லோகூர், திரு. குரியன் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் திரு. முகுல் ரொஹட்கி ஆஜரானார்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமங்களில், 80 உரிமங்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். மீதமுள்ள 138 சுரங்க ஒதுக்கீட்டில், 46 சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், அவற்றை ரத்து செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்ட மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், மற்ற 92 உரிமங்களை ரத்து செய்துவிட்டு, மொத்தமாக 172 சுரங்க உரிமங்களை மறு ஏலம் விடுவதற்கு அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார். மேலும், முறைகேடாக சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்களிடம் அபராதம் வசூலிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.