ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் முறைகேடு - மாறன் சகோதரர்கள் மீதான விசாரணை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Apr 23 2014 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரத்தில், மாறன் சகோதரர்கள் மீது, ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மிரட்டி வாங்கிய தயாநிதிமாறன், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததோடு, இதற்கு பிரதிபலனாக சன் குழுமத்தில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும், சி.பி.ஐ. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. எச்.எல்.தாது, திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் திரு. பிரசாந்த் பூஷண், ஏர்செல், மேக்சிஸ் விவகாரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.