2ஜி உள்ளிட்ட ஊழல் விவகாரங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக தொடர்ந்து கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - மன்மோகன் சிங் தவறு செய்திருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறிய கருத்தால் பரபரப்பு
Sep 13 2014 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2ஜி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங்குக்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம்சாட்டியுள்ள நிலையில், மன்மோகன் சிங் தவறு செய்திருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.கமல்நாத் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், இந்த ஊழல் தொடர்பாக அனைத்தும் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே நடைபெற்றதாக முந்தைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி திரு.வினோத்ராய் தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.கமல்நாத், திரு.மன்மோகன் சிங் தவறு செய்திருக்கலாம் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து சர்ச்சை எழுந்தபோது, இதுபற்றி விசாரிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என முன்னாள் வர்த்தக அமைச்சர் என்ற முறையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் குழுவை அமைக்க திரு.மன்மோகன்சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாகவும் திரு.கமல்நாத் குறிப்பிட்டுள்ளார். 2ஜி விவகாரத்தில் திரு.மன்மோகன் சிங்குக்கும் தொடர்பு இருப்பதாக திரு.கமல்நாத் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.