செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் வலம் வர உள்ளது மங்கள்யான் விண்கலம் - திரவ எஞ்ஜின் சோதனையை வெற்றிகரமாக முடித்தனர் விஞ்ஞானிகள்
Sep 23 2014 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மங்கள்யான் விண்கலத்தின் திரவ என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தைதைத் தொடர்ந்து, நாளை விண்கலம் செல்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நுழைய உள்ளது. இதற்காக திரவ எஞ்சின் 24 நிமிடம் இயக்கப்படும்.
இந்தியாவிலேயே வடிவகைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 68 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மங்கள்யான் தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. இதனை, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தி நிலை நிறுத்தும் கடினமானப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, கடந்த 300 நாட்களாக இயக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த திரவ எஞ்சின் நேற்று பிற்பகல் 4 நொடிகள் இயக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததால், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்யான் நுழைவது உறுதியாகிவிட்டது. மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் வரும் போது திரவ எஞ்சின் நாளை காலை 7 மணி 17 நிமிடங்களுக்கு மீண்டும் 24 நிமிடம் இயக்கப்பட்டவுடன் விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த விண்கலத்தை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விண்கலம் மிகவும் நல்லநிலையில் இருப்பதாகவும், அதன் பாதை சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தை 6 மாத காலம் சுற்றிவரும் மங்கள்யான், அந்த கிரகம் குறித்த அரிய தகவல்களையும், அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளையும் படம் எடுத்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். இந்நிலையில், மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கும் புகைப்படங்கள், நாளை கிடைக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரித்துள்ளனர்.