மகாராஷ்டிரத்தின் புனே மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு - தொடர் மழையால் மீட்புப்பணிகள் பாதிப்பு
Aug 1 2014 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரத்தின் புனே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளது.
புனே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியானார்கள். மேலும் 175 பேரின் நிலைமை தெரியாத நிலையில், 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சகதி, கற்பாறை மற்றும் இடிபாடுகளில் இருந்து இதுவரை 16 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உள்பட 51 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எட்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகியுள்ளதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை குறைந்து வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்தனர்.அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணி சிரமமாக உள்ளது. இன்னும் 121 பேர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சம்பவ இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.