மக்களவைக்கான 5-ம் கட்டத் தேர்தல் : கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
Apr 17 2014 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 5-வது கட்டமாக, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்துடன், ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
16-வது மக்களவைக்கான தேர்தல் 9 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நான்கு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது கட்டமாக, 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு இன்று வாக்கப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 7, சத்தீஸ்கரில் 3, ராஜஸ்தானில் 20, மஹாராஷ்டிராவில் 19, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் தலா 11, மத்தியப்பிரதேசத்தில் 10, ஜார்க்கண்டில் 6, மேற்குவங்கத்தில் 4, ஜம்மு-காஷ்மீரில் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 121 மக்களவைத் தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்களும், பெண்களும் நீண்டவரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன், 147 இடங்கள் கொண்ட சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலும் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 10-ம் தேதி 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் மீதமுள்ள 77 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.