ஜம்மு-காஷ்மீர் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவல் - சீன அதிபர், நாடு திரும்பிய சிலமணி நேரத்தில், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால், எல்லையில் பதற்றம்
Sep 20 2014 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லைப் பகுதியிலிருந்து வெளியேறிய சீன ராணுவத்தினர், சில மணி நேரத்திற்குள் மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - சீனா இடையே எல்லைப்பிரச்னை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது சீன ராணுவத்தினர் ஊடுருவும் நிகழ்வுகள் நீடித்து வருகின்றன. சீன அதிபர், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரு நாடுகளின் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவல் கவலை அளிக்கக்கூடியது என அந்நாட்டு அதிபர் முன்னிலையில், பிரதமர் திரு.நரேந்திரமோதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சீன ராணுவப்படையினர் எல்லையிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
இந்நிலையில், லடாக் எல்லையை ஒட்டியுள்ள இந்திய பகுதியான சுமர் என்ற இடத்தில் நேற்று 35-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்திய எல்லைக்கப்பால், சீன பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், இந்தியா - சீனா எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமர் பகுதிக்குள் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர், அப்பகுதி, சீனாவுக்கு சொந்தமானது என தெரிவித்து இருப்பது பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீன ராணுவத்தினரை, இந்திய எல்லையை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.