காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிரான நிலமோசடி புகார்கள் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்பு
Apr 24 2014 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு எதிரான நிலமோசடி புகார்கள் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, சட்டத்திற்கு புறம்பாகச் செயல்பட்டு, தனது ரியல் எஸ்ட்டேட் நிறுவனமான D.L.F. பெயரில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இந்த மோசடிக்கு காங்கிரஸ் முதலமைச்சர்களும் உறுதுணையாக செயல்பட்டதாகவும் பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. வதேராவின் இந்த நிலமோசடி விவகாரங்கள் பற்றி, எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கடுமையாக விமர்சித்தன.
இதனிடையே, வதேராவுக்கு எதிரான நிலமோசடி புகார்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராபர்ட் வதேராவுக்கு எதிராக குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், உரிய விளக்கம் அளிக்கக்கோரி ராபர்ட் வதேரா மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.