டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி : வரும் 2-ம் தேதிவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு
Jul 29 2014 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி, அஷாபுதீன் என்பவனை வரும் 2-ம் தேதிவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஷாபுதீன் ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரை கடத்தி சதித்திட்டங்களுக்கு பணம் திரட்ட முயன்றதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூலம் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி போலீசார் உரிய வாரண்ட் பிறப்பித்து, கொல்கத்தா சிறையில் இருந்து அஷாபுதீனை டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவனை, வரும் 2-ம் தேதிவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அஷாபுதீனுக்கு, பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள ஜாவித் பாலுசி என்ற முக்கிய தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளதாகவும், இந்தியாவில் சதித் திட்டங்களுக்காக திரட்டப்படும் பணம், ஹவாலா பணப் பரிமாற்றத்தின் மூலம் அஷாபுதீனுக்கு அனுப்பப்பட்டு வந்ததாகவும், இதில் அவன் முக்கிய பங்கு வகித்ததாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.