மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின், ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் : விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு சி.பி.ஐ. சம்மன்
Apr 23 2014 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மெகா ஊழல்களில் ஒன்றான, ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், மத்திய நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளரை, நாளை மறுதினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறைக்கு பொறுப்பு வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்க வயல்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு காரணமாக, நாட்டுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய மத்திய நிலக்கரித்துறை செயலாளர் பி.சி.பராக் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., நாளை மறுதினம் அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு ஆய்வுக்குழு வழங்கப்படவிருந்த நிலக்கரி வயல், பி.சி.பராக் மேற்கொண்ட முடிவு காரணமாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா அனுப்பிய, பிரதமர் அலுவலக வேண்டுகோள் கடிதத்தை அடுத்து, இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நாளை மறுதினம், பி.சி.பராக் ஆஜராகும்போது அவரிடம் இந்த முடிவுமாற்றம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.