எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் இனி வெள்ளைக்கொடி பறக்காது என மத்திய அமைச்சர் எச்சரிக்கை - தக்க பதிலடியில் ஈடுபட பாதுகாப்புப் படைக்கு உத்தரவு
Sep 1 2014 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்த மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், எல்லையில் தொடர்ந்து அந்நாடு அத்துமீறினால் இனி சமாதானம் நிலவாது என்றும் எச்சரித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அடிக்கடி ஊடுருவும் பாகிஸ்தான் ராணுவம், பல்வேறு தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறது. இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய கொடி அமர்வு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தற்போது அங்கு அமைதி நிலவும் சூழ்நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறினால் இனி வெள்ளை கொடி காட்டப்போவதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தி அமைதி காணவே இந்தியா நாடுகிறது என தெரிவித்தார். இதுவரை 15 முறை இந்திய ராணுவம் வெள்ளைக்கொடி காட்டியிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இனிமேல் தாக்குதல் நடத்தினால் வெள்ளைக்கொடி காட்டாமல், துப்பாக்கிச்சூடு நடத்த தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் திரு. ராஜ்நாத் சிங் கூறினார். இதனிடையே, இந்த மாத இறுதியில் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை, திரு. ராஜ்நாத் சிங் சந்திக்கப் போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.