தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தொடர்புடைய ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை
Sep 20 2014 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின் குடும்ப தொலைக்காட்சியான சன் குழுமத்துக்கு 600 கோடி ரூபாய் முறைகேடாக கைமாறிய ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இவ்வழக்கில் சிதம்பரத்தின் பெயரயும் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய நிர்பந்தித்தார். இதையடுத்து, ஏர்செல் நிறுவனப் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு கைமாறாக, தயாநிதிமாறனின் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில், மேக்சிஸ் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில், விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., பங்குகள் கைமாறியதில் தயாநிதிமாறனின் தலையீடு இருந்ததை உறுதி செய்தது. இந்த வழக்கில், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த மாதம் 29-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. ஓ.பி. ஷைனி முன்னிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது குறித்த விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில், வெளிநாட்டு நேரடி முதலீட்டை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதித்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. ஏர்செல் நிறுவனம், சன் குழுமத்திற்கு முதலீடு செய்வதற்கு ஏதுவாக, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை ப.சிதம்பரம் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கியதாக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் இதற்கான ஒப்புதலை அளித்தது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ப.சிதம்பரத்தையும் சேர்ப்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.