பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்காதவர்கள், பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என மிரட்டல் விடுத்த பா.ஜ.க. தலைவரை கைது செய்ய உத்தரவு - போலீசாருக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் அதிரடி
Apr 23 2014 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்காதவர்கள், பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டுமென்று மிரட்டல் விடுத்த பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங்கை கைது செய்ய ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகார் மாநிலம் நவாடா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் திரு. கிரிராஜ் சிங், தனது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தலுக்கு பிறகு பாகிஸ்தான் சென்று விட வேண்டும் என்று மிரட்டும் தொணியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, கிரிராஜ் பேசியது தொடர்பாக எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வழங்கிய புகாரினை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கிரிராஜ் சிங் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இதனிடையே, கிரிராஜிக்கு எதிராக பீகார் மாநில காவல்துறை முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கிரிராஜ் சிங்கிற்கு எதிரான வழக்கு விசாரணை ஜார்கண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் கிரிராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி போலீசாருக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.